தமிழ்நாடு

நாகூர் தர்கா கந்தூரி விழா: பொதுமக்கள் இன்றி நடைபெற்ற சந்தனம் பூசும் வைபவம்

kaleelrahman

நாகூர் ஆண்டவர் தர்காவின் 465 ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் வைபவம் பொதுமக்கள் இன்றி நடைபெற்றது.

புகழ்பெற்ற இஸ்லாமிய வழிபாட்டு தலமான நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறும். இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று (13.01.22) இரவு நாகையில் இருந்து புறப்பட்டு நாகூர் வந்தடைந்தது.

இரவு ஊரடங்கு என்பதால் நாகை மற்றும் நாகூரில் உள்ள தெருக்களுக்கு செல்லாமல் பொதுமக்கள் இன்றி சந்தனக்கூடு ஊர்வலம் அலங்கார வாசல் வந்தடைந்தது. இன்று (14 ம் தேதி) அதிகாலை பாரம்பரிய முறைகாரர் வீட்டில் சந்தன குடத்தை. வாங்கி கூட்டில் வைக்கப்பட்டது.

இதையடுத்து கால் மாட்டு வாசல் வழியாக சந்தனகுடம் தர்கா உள்ளே கொண்டு செல்லப்பட்டு அதிகாலை 4:30 மணி அளவில் போர்டு ஃஆப் டிரஸ்டிகள் முன்னிலையில் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தர்கா உள்ளே பொதுமக்களை அனுமதிக்காமல் மிக எளிமையான முறையில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சந்தனக்கூடு விழாவிற்கு நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.