தமிழ்நாடு

நாகர்கோவில்: கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ்-விபத்தில் ஓட்டுநர் உடல் நசுங்கி பலி.!

webteam

நாகர்கோவில் அருகே அதிகாலையில் அதி வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையில் மோதி விபத்துக்குள்ளானதில், ஆம்புலன்ஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் மற்றொரு கிளை மருத்துவமனை நாகர்கோவில் கோட்டார் பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள ஆம்புலன்ஸ் இரண்டு மருத்துவமனைக்கும் தேவைக்கேற்ப நோயாளிகளை கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஜெருஸ்லின் என்பவர் மருத்துவமனையின் ஆம்புலன்ஸை இயக்கி வருகிறார். இன்று அதிகாலையில் ஆம்புலன்ஸ் நாகர்கோவிலில் இருந்து ஈத்தாமொழிக்கு சென்று கொண்டிருந்த போது, அதிகாலை என்பதால் சாலையில் வாகன போக்குவரத்து குறைவாக காணப்பட்டுள்ளது. அதனால் வேகமாக சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் கோவில்விளை பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பேக்கரி ஒன்றில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளானதில் ஆம்புலன்ஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

இந்நிலையில் விபத்து குறித்து அப்பகுதியினர் சுசீந்திரம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விபத்துக்குள்ளான வாகனத்தையும், மோதிய வேகத்தில் உடல்நசுங்கி பலியான ஜெருஸ்சிலின் உடலையும் மீட்டனர்.

விபத்து குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.