தமிழ்நாடு

கடன் வாங்கியவர் தீக்குளிப்பு - காப்பாற்ற முயன்ற கடன்கொடுத்த பெண் உயிரிழப்பு

webteam

நாகர்கோவில் அருகே கடன் பிரச்னையால் தீக்குளித்த பெண்ணை காப்பாற்ற முயன்ற, கடன் கொடுத்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த சரலூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி அம்பிகா. இவர் அதே பகுதியை சேர்ந்த தங்கம் என்பவருக்கு 4 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கியுள்ளார். கடன் தொகையை பெற்றுக் கொண்ட தங்கம் பணத்தை சிறிது நாட்களுக்குள் திருப்பி தருவதாக கூறியுள்ளார். 

ஆனால் பல நாட்களாக தங்கம் பணம் தராமல் அம்பிகாவை இழுக்கடித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தங்கம் நான்கு லட்ச ரூபாயை திரும்ப தருவதாக கூறி அம்பிகாவை வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளதாக தெரிகிறது. 

இந்நிலையில், தங்கம் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது தலையில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அம்பிகா அவரை தடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக, தீயானது அம்பிகாவின் உடல் மீதும் பற்றிக் கொண்டது. இதில் அம்பிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் தங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.