தமிழ்நாடு

பொறுப்பேற்ற சில மணி நேரத்தில் திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்! நாகையில் பரபரப்பு

ஜா. ஜாக்சன் சிங்

நாகை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர் ஒருவர் திமுகவில் இணைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 15 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் 8-வார்டுகளையும், திமுக 4 வார்டுகளையும், திமுக கூட்டணிக் கட்சிகள் 2 வார்டுகளையும், அதிமுக 1 வார்டையும் கைப்பற்றின.

இந்நிலையில், இன்று காலை 15 வார்டுகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் பேரூர் மன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதனிடையே, திட்டச்சேரி பேரூராட்சியில் 15 வார்டுகளில் நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 14-வது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று, இன்று பொறுப்பேற்ற கவுன்சிலர் கஸ்தூரி கலியப்பெருமாள் என்பவர், சில மணிநேரங்களிலேயே திமுகவின் இணைந்தார். திமுக மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தலைமையில் அவர் அக்கட்சியில் இணைந்தார்.

நாளை மறுநாள் பேரூர் மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.