தமிழ்நாடு

நாகை: வாக்கு எண்ணும் மையத்தின் மேலே ட்ரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு

Veeramani

நாகை வாக்கு எண்ணும் மையத்தின் மேலே ட்ரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி வாக்குவாதம் செய்த திமுகவினர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்த நிலையில் நாகையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு மேலே அதிகாலையில் ட்ரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகையை அடுத்த தெத்தி பகுதியில் உள்ள இ.ஜி.எஸ்.பிள்ளை தனியார் கல்லூரியில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை 20 நிமிடத்திற்கு மேலாக வாக்கு எண்ணும் மையத்திற்கு மேலே ட்ரோன் கேமரா பறந்துள்ளது. அதனை தொடர்ந்து தகவலறிந்த திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் அங்கு குவிந்த கூட்டணி கட்சியினர் அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட சென்னையை சேர்ந்த குமார், சுரேஷ்குமார், பாலாஜி ஆகிய மூன்று பேரை நாகூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும், அவர்களிடம் இருந்த ட்ரோன் கேமரா மற்றும் கழுகுப்பார்வை காட்சிகளை பதிவு செய்த செல்போனை பதிவு செய்த போலிசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே வாக்கு எண்ணும் மையத்தினுள் ட்ரோன் கேமராவை பறக்கவிட அனுமதி அளித்த அதிகாரிகளிடம் திமுகவினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ட்ரோன் கேமரா பறக்கவிட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி திமுக மாவட்ட செயலாளர் கௌதமன், கீழ்வேளூர் சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி ஆகியோர் நாகை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரவின் நாயரிடம் புகார் அளித்துள்ளனர். நாகையில் வாக்கு எண்ணும் மையத்தின் மேலே ட்ரோன் கேமரா பரந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.