தமிழ்நாடு

நாகை: ஆர்டர் கொடுத்த தோசையை மாற்றி வைத்த சப்ளையருக்கு அரிவாள் வெட்டு

kaleelrahman

நாகையில் ஆர்டர் செய்த தோசையை மற்றவருக்கு வைத்த ஹோட்டல் சப்ளையருக்கு காதில் அரிவாளால் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

நாகை அடுத்துள்ள வெளிப்பாளையம் தேவி திரையரங்கு அருகே ஹோட்டல் வைத்து நடத்தி வருபவர் மோகன். தேவி தியேட்டரில் ஓடும் கர்ணன் படத்தை பார்ப்பதற்காக வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒன்றை அருண்குமார் மற்றும் சப்பை சிவா ஆகிய இருவரும் சென்றுள்ளனர். இந்நிலையில் மோகனின் உணவகத்திற்கு இருவரும் சாப்பிட வந்துள்ளனர். அப்போது அருண்குமார் தோசை ஆர்டர் செய்ததாகவும், அந்த தோசையை சப்ளையர் வேறு ஒரு டேபிளில் சாப்பிட்டவர்களுக்கு வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் கடை ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில ஈடுபட்டுள்ளனர். இதனிடையே ஒன்றை என்கிற அருண்குமார் மற்றும் சப்பை என்கிற சிவா ஆகிய இருவரும் கத்தியை எடுத்து சப்ளையர் பாஸ்கரனின் காதில் வெட்டியுள்ளனர். இதில், காயமடைந்த பாஸ்கரனை நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

பின்னர் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய வெளிப்பாளையம் போலீசார் ஒன்றை அருண்குமார் மற்றும் சப்ளை சிவா ஆகிய இருவரையும் கைது செய்தனர். நாகையில் ஆர்டர் செய்த தோசையை மற்றவருக்கு கொடுத்த ஹோட்டல் ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.