பெண் சிசுக்கொலை
பெண் சிசுக்கொலை File image | Freepik
தமிழ்நாடு

அடுத்தடுத்து நிகழும் சிசு மரணங்கள்... உசிலம்பட்டியில் மீண்டும் தலைதூக்குகிறதா பெண் சிசுக்கொலை?

webteam

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

மதுரை அல்லிகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா - ஜெயராம் தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் இவர்களுக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளது. இதையடுத்து இந்த பெண் சிசுவிற்கு அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தாக பெற்றோர் தகவல் அளித்துள்ளனர்.

GH

அதன் அடிப்படையில், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆரோக்கியத்துடன் பிறந்த பெண் சிசு, மருத்துவமனை வார்டிலேயே மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதே போல் கடந்த 2ஆம் தேதி ஜோதில்நாயக்கணூரைச் சேர்ந்த வாசுகி - ராஜ்குமார் தம்பதிக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கும் ஒரு சம்பவம் நடந்தது. அக்குழந்தை பிறந்த ஏழே நாட்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருந்தது. அக்குழந்தைக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டு போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.

GH

ஒரே வாரத்தில் அடுத்ததடுத்து 2 பெண் சிசுக்கள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் குறித்து சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதையடுத்து விரைந்து சென்ற போலீசார், மருத்துவமனையில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்த பெண் சிசுவின் உடலையும் உடற்கூறாய்வு செய்ய அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக கடந்த 2022 டிசம்பரில் கணவாய்பட்டியைச் சேர்ந்த ரெஜீனா - பிரபாகரன் தம்பதிக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தை 15வது நாளிலும், கடந்த ஜனவரி மாதம் உத்தப்பநாயக்கணூரைச் சேர்ந்த காளிஸ்வரி - கருத்தபாண்டி தம்பதிக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தை பிறந்த 8 வது நாளிலும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தது இங்கே கவனிக்கத்தக்கது.

இப்படியாக கடந்த ஐந்தே மாதத்தில் 4 பெண் சிசுக்கள் ஒரே மாதிரி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

baby death

பெண் சிசுக்கொலை சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதியென்ற பெயரில் முன்காலங்களில் மிகவும் பேசப்பட்ட உசிலம்பட்டி பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக அது குறைந்திருந்தது. ஆனால் இப்போது நடக்கும் சம்பவங்களை வைத்து பார்க்கையில், மீண்டும் பெண் சிசுக்கொலைகள் அங்கு மறைமுகமாக அரங்கேறி வருகிறதோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. இதையொட்டி, அந்த கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.