இந்து மதத்தை முகமூடியாக அணிந்து கொண்டு நித்யானந்தா மக்களை ஏமாற்றி வருவதாக அவரின் முன்னாள் சீடர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்பெல்லாம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்த நித்யானந்தா கடந்த சில நாட்களாக நெடுந்தொடரைப் போல அன்றாடம் தொலைக்காட்சிகளில் இடம்பெறத் தொடங்கிவிட்டார். அவரைப் பற்றியும் அவரது ஆசிரமத்தைப் பற்றியும் வெளிவரும் செய்திகள் அதிக அச்சத்தை ஏற்படுத்துகின்றன. நித்யானந்தாவின் மற்றொரு பக்கம் என்று கூறி புதுப்புதுத் தகவல்களை அவரிடம் சீடர்களாக இருந்தவர்களே வெளியிடுகின்றனர்.
நடிகை உடனான வீடியோவை வெளியிட்ட லெனின் கருப்பன் முதல், மகள்களை கடத்தி வைத்திருக்கிறார் என அண்மையில் நித்யானந்தா மீது புகாரளித்த ஜனார்த்தன ஷர்மா வரை அனைவரும் அவரின் முன்னாள் சீடர்களே. இவர்களில் முக்கியமானவர் கனடா நாட்டைச் சேர்ந்த சாரா லாண்ட்ரி. நித்யானந்தா தம்மை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக பெங்களூரு காவல் நிலையத்தில் புகாரளித்த சாரா, ஆசிரமத்தில் குழந்தைகள் கொடுமைப்படுத்தப்படுவதாக குண்டைத் தூக்கிப் போட்டார்.
அதுமட்டுமின்றி நித்யானந்தா தம்மை காதலிப்பதாகக் கூறினார் என முகநூல் பதிவுகளைக் காட்டி சலசலப்பை ஏற்படுத்தினார். "எனது கதவுகள் உனக்காக திறந்தே இருக்கின்றன", "உன் விதி என்னோடுதான்", "நீ பார்வதி ஆக விரும்புகிறாயா?", "நான் உன்னை காதலிக்கிறேன்", என்றெல்லாம் நித்யானந்தா தமக்கு குறுஞ்செய்தி அனுப்பினார் என்றுகூறி வீடியோ வெளியிட்ட சாரா, தற்போது வெர்ஷன் 2 பாயிண்ட் ஓ-வாக அடுத்த காணொலியை தனது யுடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சாராவும் நித்யானந்தாவின் முன்னாள் சீடரான ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஹரன் என்பவரும் உரையாடுகின்றனர். இருவரும் நித்யானந்தா ஆசிரமத்தில் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றனர். ஆசிரமத்துக்கு வருபவர்களிடம் நித்யானந்தா பணம் பறிக்கிறார் எனப் புகார் கூறுகிறார் ஹரன். சீடர்களை மூளைச்சலவை செய்தும் வசியப்படுத்தியும் வைத்திருக்கிறார் நித்யானந்தா எனக்கூறி அதிரவைக்கிறார் அவரது முன்னாள் பக்தர். நித்யானந்தாவால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பலர் தம்மிடம் கூறியிருப்பதாகவும், அவர் ஒரு முகமூடி அணிந்த மோசக்காரர் என்றும் குற்றம்சாட்டுகிறார் ஹரன்.