தமிழ்நாடு

''தேர்தல் நேரத்து லஞ்சம்தான் பொங்கல் பரிசு'' - முத்தரசன்

''தேர்தல் நேரத்து லஞ்சம்தான் பொங்கல் பரிசு'' - முத்தரசன்

webteam

மக்கள் வரி பணத்தை எடுத்து பொங்கல் பரிசு என்ற பெயரில் தேர்தல் நேரத்தில் லஞ்சமாக வழங்கி முதலமைச்சர் பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுவதாக முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பலமுறை கோரிக்கை விடுத்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் தற்போது பொங்கல் பரிசாக ரூபாய் 2500 அறிவித்திருப்பது தேர்தலுக்கான லஞ்சம். பொங்கல் பரிசு மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முதலமைச்சரின் முயற்சி ஒருபோதும் பலிக்காது என்று தெரிவித்தார்.

மினி க்ளினிக் குறித்த கேள்விக்கு பதிலளித்த முத்தரசன்,''அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்கனவே மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் அவற்றை மேம்படுத்தாமல் விளம்பரத்திற்காக மினி கிளினிக் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது'' என பேசினார்.

மேலும் வேளாண் சட்டங்கள் குறித்து பேசிய முத்தரசன், ''வேளாண் சட்டங்கள் மூலம் எதிர்காலத்தில் நெல் கொள்முதல் நிலையங்களும் நியாய விலை கடைகளும் இருக்காது. பணம் வைத்திருப்பவர்கள் விளைபொருட்களுக்கு செயற்கை விலை நிர்ணயம் செய்ய இச்சட்டங்கள் வழிவகுக்கும்.வேளாண் சட்டங்களுக்கு தமிழக முதல்வர் ஆதரவு தெரிவிப்பது வேதனையாக உள்ளது'' என்றார்