தமிழ்நாடு

களைகட்டும் ரம்ஜான் கொண்டாட்டங்கள்... சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமியர்கள்!

நிவேதா ஜெகராஜா

ரம்ஜான் திருநாளையொட்டி தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்லாம் மதத்தின் 5 கடமைகளில் முக்கியமானது ஒன்று நோன்பு இருப்பது. புனிதமான ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பை கடைபிடிப்பர். அதன்படி, ரம்ஜான் மாதம் முழுவதும் நோன்பு இருந்த இஸ்லாமியர்கள், ரம்ஜான் பண்டிகையான இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சென்னையில் திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களிலும், தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களிலும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

கொரோனா தொற்று காரணமாக, 2 ஆண்டுகளாக கூட்டுத் தொழுகை நடத்தப்படாத நிலையில், நடப்பாண்டில் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைந்ததாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். ஏழை, எளியவர்களுக்கு தங்களால் முடிந்தவற்றை வழங்கி ரம்ஜானை மனநிறைவுடன் இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர்.