தமிழ்நாடு

பாலியல் புகாரில் ஜாமீன் கோரிய முகிலன் வழக்கு ஒத்திவைப்பு

webteam

 பாலியல் புகாரில் ஜாமீன் கோரி முகிலன் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சமூக ஆர்வலர் முகிலன் இயற்கை வள பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல சமூக பிரச்னைகளில் தீவிரமாக செயல்பட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் பேட்டியளித்தவர் திடீரென மாயமானார். இவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முகிலன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் கைதானார். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகிலன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கில் முகிலனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என பாலியல் புகார் அளித்தவர் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை நவம்பர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.