தமிழ்நாடு

இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்ட முகிலன் 

webteam

இரவோடு இரவாக கரூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் விஜய் கார்த்திக் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

பிப்ரவரி 15ஆம் தேதி காணமால் போன முகிலன் கடந்த சனிக்கிழமை திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட முகிலனிடம் சிபிசிஐடி காவல்துறையினர் பல மணிநேரம் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து கரூரைச் சேர்ந்த பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் முகிலன் கைது செய்யப்பட்டார். அவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு நாள் சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை இன்று காலை 10 மணிக்கு கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். எனினும் இரவோடு இரவாக முகிலனை கரூருக்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி காவல்துறையினர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் விஜய் கார்த்திக் முன்பு ஆஜர்படுத்தினர். 

முகிலனை ஜூலை 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அப்போது தனக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என முகிலன் கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த மாஜிஸ்திரேட் திருச்சி மத்திய சிறையில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள் எனக்கூறினார். இதனையடுத்து திருச்சி அழைத்துச் செல்லப்பட்ட முகிலன் அங்குள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.