தமிழ்நாடு

முதுகுளத்தூர்: ஓபிஎஸ் ஆதரவாளர்களின் ஆர்பாட்டத்தில் இபிஎஸ் உருவ பொம்மை எரிப்பு

kaleelrahman

முதுகுளத்தூரில் இபிஎஸ் உருவ பொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினருக்கு இடையிலான யுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டதாக கூறி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தென் மாவட்டங்களின் சில இடங்களில் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ்க்கு எதிராக கோசங்களை எழுப்பி இபிஎஸ் உருவ பொம்மையை தீ வைத்து எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

கடந்த 23 ஆம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வத்தை அவமதிக்கும் வகையில் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒபிஎஸ்க்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் அவர் மீது தண்ணீர் பாட்டிலை வீசினர்.

இதை கண்டித்து முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக துணை செயலாளர் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் உருவ பொம்மை மற்றும் படத்தை எரித்து இபிஎஸ் ஒழிக, ஒபிஎஸ் வாழ்க என ஆதரவு கோசங்களை எழுப்பினர்.

இதில், 50க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.