MRTS
MRTS PT
தமிழ்நாடு

ஜூலை 1 முதல் கடற்கரையிலிருந்து சேப்பாக்கம் வரை பறக்கும் ரயில் இயங்காது!

PT

ஜூலை ஒன்றாம் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இறுதி வரை சென்னை கடற்கரையில் இருந்து சேப்பாக்கம் வரை செல்லும் பறக்கும் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையில் நான்காவது மின்சார ரயில் பாதை வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில், முதற்கட்டமாக அடுத்த மாதத்தில் இருந்து 7 மாதங்களுக்கு குறிப்பிட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை நான்காவது வழித்தடம் அமைக்கப்படும் நிலையில் முதல் கட்டமாக எழும்பூர் வரை நடைபெற உள்ள பணிகளுக்காக பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதத்தில் இருந்து வேளச்சேரி முதல் சேப்பாக்கம் வரை மட்டுமே பறக்கும் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

சேப்பாக்கத்தில் இருந்து பயணிகள் சாலை மார்க்கமாக செல்லவேண்டியுள்ளது. இதனால் நாள் ஒன்றிற்கு நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் பயணிகள் பாதிக்கபட உள்ளனர்.

மேலும், ஜூன் மாதம் உட்பட மூன்று மாதத்திற்கான சீசன் டிக்கெட் எடுத்துள்ள பயணிகள் ஜூலை ஆகஸ்ட் மாதத்திற்காக கட்டப்பட்ட கட்டணத்தை எவ்வாறு பறக்கும் ரயில் நிர்வாகம் திருப்பி கொடுக்க உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்த விரிவான விளக்கம் விரைவில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.