தமிழ்நாடு

மு.க. அழகிரியால் இட்லி கடைதான் போடமுடியும் - சுப்ரமணிய சுவாமி

webteam

திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்றும், அழகிரியால் இட்லி கடை மட்டும் தான் வைக்க முடியும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக கூறியுள்ளார். வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி சென்னை அண்ணாசாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை இந்தப் பேரணியை அவர் நடத்தவுள்ளார். அதன்பின்னர் தனது அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியன் சுவாமி, “திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின் தான். மு.க.அழகிரியால் இட்லி கடையை மட்டும் தான் வைக்கமுடியும். பாஜக தமிழகத்தில் தற்போது வரை நடிகர்களின் பின்னால் தான் சென்று கொண்டிருக்கிறது. நடிகர்களின் பின்னால் போவதை நிறுத்திவிட்டு பாஜக தத்துவத்தை முன்னிறுத்தினால் தான் தமிழகத்தில் வெற்றி அடைய முடியும். பாஜக ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் பின்னால் போகாமல் இருக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.