ED, IT, CBI
ED, IT, CBI puthiya thalaimurai
தமிழ்நாடு

“ED, IT, CBI - இந்த 3 துறைகளை நம்பியே பாஜக தேர்தலை சந்திக்கிறது” - எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சனம்

webteam

செய்தியாளர்: கருப்பஞானியார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சிறுகுளம் கண்மாய் கரை பகுதியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் உயர்கோபுர மின் விளக்கு மற்றும் ஆழ்துளை கிணறுடன் கூடிய குளியல் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை விழாவில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பங்கேற்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது...

‘ED, IT, CBI’

“அமலாக்கத்துறை, சிபிஐ சோதனைகளுக்கு பயந்தவர்கள் I.N.D.I.A. கூட்டணியிலிருந்து ஓடும் முயற்சியில் ஈடுபடுவார்கள். அதில், தைரியமாக நிற்கக் கூடியவர்களால் I.N.D.I.A. கூட்டணி பலமாக உள்ளது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை பயன்படுத்தி மட்டுமே பாஜக நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. மோடியும் அமித்ஷாவும் மிரட்டும் (பிளாக்மெயில்) அரசியலை மட்டுமே நம்பியுள்ளனர், அதனாலேயே I.N.D.I.A. கூட்டணியை உடைக்க முடிகிறது”

‘வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு...’

மக்களை பொறுத்தவரை வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவைகள் மிகப்பெரிய பிரச்னைகளாக உள்ளதால் இந்த பிரச்னையை முன்வைத்து மக்கள் வாக்களிக்க உள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தல் மிகத்தெளிவான தேர்தலாக இருக்கும், இதில், காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ராமர் கோவில் கட்டியதற்கு பின், ராமர் கோவிலை முன்வைத்து கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளதால் பாஜக கூட்டணி அதிக இடம் பெறும் என கூறப்பட்டுள்ளது.

india alliance

பெரும்பான்மையினர், ஏழை எளிய மக்கள், தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினர் வாக்குகள் I.N.D.I.A. கூட்டணிக்கே கிடைக்கும். ஏழை, எளிய நடுத்தர மக்களின் சிலிண்டர் விலையை குறைக்காமல், கலைஞர் உரிமை தொகை போன்ற திட்டங்களை கொண்டு வராமல் மத்திய அரசு 5 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டம் எந்தவித பலனையும் அளிக்காது. மக்களை பொறுத்தவரை இதைவிட பெரிய பிரச்னையாக வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வாக உள்ளதால் அதை முன்வைத்து பிரசாரம் செய்ய உள்ளோம்”

விஜய் அரசியல் பற்றி...

“விஜய் அரசியலுக்கு வந்துள்ளதை வரவேற்கிறேன், ஒவ்வொருவரும் அரசியலில் ஈடுபட வேண்டும். அரசியலை பற்றி பேச வேண்டும், அரசியல் அறிவு பெற வேண்டும் என்பது முக்கியம். அதில் விஜய் கட்சி பெயரையும் கொள்கையையும் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

vijay

அவர் தேர்தலில் போட்டியிட்டு இங்கு நிலவும் பிரச்னைகள் குறித்து பேசினால், அதற்கு நாங்கள் மறு கருத்து கூறலாம். ஆனால் கட்சி ஆரம்பித்தவுடன் கருத்து கூறுவது நியமானதாக இருக்காது” என்று தெரிவித்தார்.