லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவுக்கு சொந்தமான 3 வங்கி லாக்கர்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார். அவரது பினாமி செந்தில்குமாரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். இருவர் வீடுகளிலும் நடத்தப்பட்ட சோதனையில் 30 லட்சம் ரூபாய் பணம், 140 சவரன் நகை மற்றும் 12 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அத்துடன் பாபுவுக்கு சொந்தமான 6 வங்கி லாக்கரின் சாவிகளும் சோதனையில் சிக்கின. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பாபுவின் மூன்று வங்கி லாக்கர்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் எஞ்சிய 3 லாக்கர்களிலும் இன்று சோதனை நடைபெற்று வருகிறது. பாபுவுக்கு சொந்தமான லாக்கர்களில் இதுவரை நடைபெற்ற சோதனையில் 2000 சவரன் நகைகள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.