தமிழ்நாடு

6 மாத குழந்தையுடன் தாய் தீக்குளிப்பு.. மதுரையில் சோகம்

Rasus

மதுரையில் தாய் தனது 6 மாத குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தத்தனேரி அருகே வஉசி தெருவைச் சேர்ந்தவர் சித்ரா. இவர் தனது வீட்டில் வைத்து இன்று அதிகாலை உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்தார். சித்ராவின் அலறல் சத்தம் கேட்டதால் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சித்ராவின் உடலில் தீ மளமளவென பற்றி எரிந்தது. உடனே தீயை அணைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். இருப்பினும் சித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தீக்காயத்துடன் மீட்கப்பட்ட 6 மாத குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது.

இச்சம்பவம் தொடர்பாக செல்லூர் காவல்நிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், 12 ஆண்டுகளுக்கு முன்னர் கணவர் இறந்த நிலையில் சித்ரா மற்றொரு நபரை காதலித்து அவருடன் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் அவதூறாக பேசியதால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பிறந்து ஆறு மாத கைக்குழந்தையுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.