தமிழ்நாடு

தொடர்ந்து அழுத குழந்தை...தாயே கொன்றதாக கைது..!

webteam

வாலாஜாபேட்டை அருகே தொடர்ந்து குழந்தை அழுததால் துணியை வைத்து ஒன்றரை வயது குழந்தையை தாய் கொலை செய்துள்ளார். 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த திரவ்பதி அம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் அம்மு (எ) பவித்ரா(24). இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வாலாஜாபேட்டை வன்னிவேடு பகுதியை சேர்ந்த கௌரி சங்கர்(30) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கௌரி சங்கருக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கௌரி சங்கர் பவித்ராவையும் தனது 2 பெண் குழந்தைகளையும் விட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. 

இதனால் மனவிரக்தி அடைந்த பவித்ரா, திரவ்பதி அம்மன் கோயில் தெரு பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய அவர், தனது இரண்டாவது குழந்தை தொடர்ந்து கதறி அழுத காரணத்தால்  எரிச்சலடைந்து துப்பட்டாவால் முகத்தை மூடி அமுக்கியுள்ளார். இதனால் மூச்சுத் திணறிய குழந்தை மௌனிகா சம்பவ இடத்திலேயே இறந்து விட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பவித்ரா குழந்தையை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று, மருத்துவரிடம் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. திடீரென மயக்கம் அடைந்துவிட்டதாக கூறி நாடகமாடி உள்ளார். சந்தேகமடைந்த மருத்துவர் வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் பவித்ராவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 


விசாரணையில் கணவன் விட்டுச் சென்ற விரக்தியில் வாழ்ந்து வந்த பவித்ராஅன்று வேலை பழு காரணமாக எரிச்சலுடன் வீடு திரும்பியுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அதீத எரிச்சலடைந்து முகத்தை மூடியதாகவும் இதனால் குழந்தை இறந்து விட்டதாகவும் தான் வேண்டுமென்றே செய்யவில்லை என  வாக்குமூலம் அளித்துள்ளார். இதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாய் பவித்ராவை கைது செய்துள்ளனர்.