கோவையில் குழந்தையை கொன்ற தாய் meta ai
தமிழ்நாடு

கோவையில் ஒரு அபிராமி..? 4 1/2 வயது குழந்தையை கொன்ற தாய்! அதிர்ச்சி பின்னணி!

கோவையில் நான்கரை வயது குழந்தை மர்ம்மான முறையில் உயிரிழந்த நிலையில், முறையற்ற உறவு காரணமாக தாயே குழந்தையை கொலை செய்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PT WEB

கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி. திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக தனியாக தனது நான்கரை வயது குழந்தையுடன் வசித்து வந்தார். தனியே வாழ்ந்து வரும் தமிழரசி, கட்டிட வேலைக்கு சென்று வருகின்றார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் குழந்தை திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்து விட்டதாக கூறி, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது குழந்தை உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அக்கம் பக்கத்தினரும், தமிழரசியின் உறவினர்களும் போலீசாரிடம் சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, குழந்தையின் தாய் தமிழரசியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வெளிவந்த அதிர்ச்சி தகவல்..

தமிழரசியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருடன் கட்டிட வேலை செய்து வரும் வசந்த் என்பவருடன் சில மாதங்களாக திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

மேலும் தமிழரசியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வசந்த் உடனான உறவிற்கு குழந்தை இடைஞ்சலாக இருந்ததால் குழந்தையை அவரே கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

கோவையில் குழந்தையை கொன்ற தாய்

இதனையடுத்து குழந்தையின் உயிரிழப்பை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்க சிங்காநல்லூர் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே கைது செய்யப்பட்ட தமிழரசியிடம் கோவை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது தான் குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமி-மீனாட்சி சுந்தரம் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், நான்கரை வயது குழந்தையை தாயே கொலை செய்ததாக வெளியாகியிருக்கும் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...