தமிழ்நாடு

முட்புதரில் கிடந்த பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை.. அருகிலேயே மயக்கமடைந்த நிலையில் தாய்!

kaleelrahman

மணப்பாறை அருகே பிறந்து சிலமணி நேரம் ஆன பெண் பச்சிளம் குழந்தை மீட்கப்பட்ட நிலையில் மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆண்டவர் கோயில் பழைய பாலம் கீழ் முட்புதரில் வீசப்பட்ட பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்ட நிலையில், அடுத்து சில நிமிடத்தில் தாயும் அதே பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

வையம்பட்டி ஒன்றியம் இனாம்ரெட்டியப்பட்டியைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மனைவி சசிகலா. இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தர்மராஜ் இறந்துவிட்ட நிலையில், இவருக்கு 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தையை சசிகலாவின் சகோதரி வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், ஆண் நண்பரோடு வாழ்ந்து வந்த சசிகலா கருவுற்று இருந்த நிலையில், நேற்றிரவு சசிகலாவுக்கு வீட்டில் பிரசவமாகி அதில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஆண்டவர் கோவில் பழைய பாலம் அருகில் முட்புதரில் குழந்தையை வைத்து விட்டு தாய் சசிகலா சிறிது தூரம் சென்றதும் மயக்கம் அடைந்த கீழே விழுந்து கிடந்துள்ளார்,

இதையடுத்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் இருவரையும் மீட்டு மணப்பாறை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பச்சிளம் குழந்தை பிரிவில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய் சசிகலா மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்