தானம் செய்த தாய் பூரணம்
தானம் செய்த தாய் பூரணம் புதியதலைமுறை
தமிழ்நாடு

”அவள் பெயரிடுங்கள்” ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்தை உயிரிழந்த மகளின் நினைவாக அரசுக்கு தானம் செய்த தாய்!

யுவபுருஷ்

மதுரை மாவட்டம் கே புதூர் அருகே உள்ள சர்வேயர் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் உக்கிரபாண்டியன் - பூரணம் தம்பதியினர். இவர்களது மகள் ஜனனி உயிரிழந்த நிலையில், அவரது நினைவாக நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்று தாய் பூரணம் முடிவெடுத்துள்ளார்.

இதனிடையே, கொடிக்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்காக தனது சொத்தை தானமாக வழங்கியுள்ளார் தாய் பூரணம். பள்ளிக்கு கட்டடத்தை கட்டிக்கொள்வதற்காக அவர் கொடுத்த 1 ஏக்கர் 52 செண்டு சொத்தின் மதிப்பு ரூபாய் 4 கோடியாகும். அந்த இடத்தில் உயர்நிலைப்பள்ளி கட்டடம் கட்டிக் கொள்வற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டியதென்றும், இந்த தானப் பத்திரம் இன்றைய தேதியிலேயே அரசுக்கு கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கட்டடம் கட்டும்போது ஒரு வாசகம் பொறித்த கல்லை வைக்குமாறும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதன்படி, பள்ளிக்கு கட்டடம் கட்டுகையில், அதற்கு “ஜனனியின் நினைவு வளாகம்” என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். சொத்தை மகளின் நினைவாக அரசுக்கு தான பத்திர பதிவு செய்து கொடுத்ததை, முறையாக முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலையில் பூரணம் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஒப்படைத்தனர். மகளின் நினைவாக 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை பள்ளி கட்டடம் கட்டிக்கொள்ளுமாறு தானம் கொடுத்த தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.