தமிழ்நாடு

மகன் இறந்த செய்தியை கேட்ட தாய் மாரடைப்பால் மரணம் - திருச்சியில் உருக்கமான சம்பவம்

webteam

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்ணனூரில் மகன் இறந்த செய்தியைக் கேட்ட தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது. 

திருச்சி துறையூர் அடுத்த கண்ணனூரைச் சேர்ந்தவர் கனகராஜ்(60). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்ததுடன் கடைத்தெருவில் இலை, வெற்றிலை வியாபாரமும் செய்து வந்தார். நேற்று முன் தினம் தனது கடைக்கு எதிரே உள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்திய இவர், தனது இரு சக்கர வாகனத்தில் ஏறும் போது மயக்கமடைந்து கீழே விழுந்தார். மகன் கீழே விழுந்ததை பார்த்து அவரது தாயாரான சரசம்மாளும் பதட்டமடைந்து மயக்கமடைந்தார்.

கனகராஜ்ஜை மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். இந்தத் தகவலை கேட்ட தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து இருவரது உடலும், ஒரே இடத்தில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இது காண்போரை நெகிழ்ச்சி அடைய வைத்தது.