தமிழ்நாடு

அரசு பேருந்து மோதியதில் 90-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி – உரிமையாளரும் உயிரிழப்பு

webteam

வேப்பூர் அருகே மேச்சலுக்குச் சென்ற ஆடுகள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 90-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியான நிலையில், ஆட்டின் உரிமையாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். ஆடுகளை வளர்த்து வந்த இவர், கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் அருகே இன்று அதிகாலை 150-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசு பேருந்து ஆடுகள் மீது மோதியதில் 90-க்கும் மேற்பட்ட ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. ஆடுகளுடன் தனது இருசக்கர வாகனத்தில் வந்த லட்சுமணனும் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வேப்பூர் போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.