கடந்த சில ஆண்டுகளாகமே டாஸ்மாக் மதுபானக் கடைகளில் MRP விலையைவிட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வந்தாலும் இந்த நடைமுறை பல்வேறு இடங்களிலும் தொடர்ந்தே வருகிறது.
இந்தச் சூழலில் இதுபோன்ற தவறுகளை தடுப்பதாகக் கூறி, டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானங்களை வாங்க ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் முறையை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்காக தனி இணையதளம் ஆரம்பிக்கப்பட்டு, மது வாங்குவோர் இந்த இணையதளம் மூலம் தங்களுக்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடைகளில் என்னென்ன மது வகைகள் இருக்கின்றன என்றும், அவற்றின் விலை என்ன என்பதையும் அறிந்து. 'Google Pay' போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் பணத்தைச் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் அந்த மதுபானத்தை டாஸ்மாக் கடைகளுக்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய முறை நேற்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்டோர் ஆன்லைனில் முன்பதிவு செய்து மதுபானங்களை வாங்கியுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.
மேலும், ஆன்லைன் முன்பதிவு முறை சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், ஆர்டர் செய்வதில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் இருப்பதாகவும், இது ஒரு புதிய முயற்சி என்பதால் ஏற்படும் பிரச்னைகளை தொடர்ந்து கண்காணித்து தேவையான மேம்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே போல வாடிக்கையாளர்கள் விரும்பும் மதுபானங்களை வழங்குவது கடை நிர்வாகத்தின் பொறுப்பு என்று கூறிய அமைச்சர், பட்வைசர் மற்றும் பாஸ்டர்ஸ் உள்ளிட்ட சில பிராண்டுகளுக்கான கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறியுள்ளார். எனினும், இதுபோன்ற முயற்சிகள் புதிதாக பலரையும் மதுபானத்தை வாங்கவைக்கும் என இந்த திட்டத்துக்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது. அரசின் இந்த முயற்சி மதுவை ஒழிப்பதற்கு பதிலாக மது வாங்குவதை மிகவும் எளிதானதாக மாற்றும் என பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் இந்த திட்டத்தை விமர்சித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.