Cow disease, Vedasandur
Cow disease, Vedasandur Vijaya Pandian, PT Desk
தமிழ்நாடு

வேடசந்தூரில் மீண்டும் பரவும் மர்ம நோய் - மூன்றே நாள்களில் 20க்கும் மேற்பட்ட மாடுகள் பலி

Snehatara

வேடசந்தூர் அருகே இரண்டாவது முறையாக மர்ம நோய் தாக்கி 20க்கும் மேற்பட்ட மாடுகள் பலியாகின. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தெப்பக்குளத்துப்பட்டி உள்ளது. இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் பசுமாடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு ஆகியவை இருக்கிறது.

இந்நிலையில் கடந்த வருடம் மே மாதம் தெப்பக்குளத்துப்பட்டியில் பசு மாடுகளை மர்ம நோய் தாக்கியதில் சுமார் 20 மாடுகளுக்கும் மேல் உயிரிழந்தன. அதன்படி தெப்பக்குளத்துபட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயி விஜயலட்சுமி வளர்த்து வந்த 15 மாடுகளுக்கு மர்ம நோய் தாக்கப்பட்டு காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி வளர்த்து வந்த 3 மாடுகளுக்கும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு தெப்பக்குளத்துப்பட்டியில் இருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். ஆனாலும் பலனில்லாமல் 3 பசு மாடுகளும் இறந்துள்ளன.

Cow disease, Vedasandur

பசுமாடுகள் இறந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மேலும் தெப்பக்குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலமுறை இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ”எங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய இந்த பசுமாடுகளை வைத்துத்தான் ஜீவனம் செய்கிறோம். அப்படியிருக்க, திடீரென கடந்த 3 நாட்களில் எங்கள் பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன. இதனால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பசுமாடுகள் நல்ல நிலைமையில் இருந்தும், திடீர் திடீரென மர்ம காய்ச்சல் ஏற்பட்டு இறந்துள்ளது பொருளாதார பாதிப்புகளையும் எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட லட்ச ரூபாய் மதிப்பிலான மாடுகள் இறந்துள்ளன.

Cow disease, Vedasandur

அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் இருந்து கழிவுகள் மற்றும் இறந்த கோழிகளை முறையாக பராமரிக்காதது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்” என மிகுந்த வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மாவட்ட நிர்வாகமும் தமிழக முதல்வரும் உடனடியாக இந்த மர்ம நோய் குறித்து நடவடிக்கை எடுத்து கால்நடைகளை காப்பாற்றி எங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.