தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு தினங்களில் வடகிழக்குப்பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடக்கம் தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதன்பின்னர் வரும் தினங்களில் படிப்படியாக மழை உட்புறங்களில் பெய்யத்தொடங்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூர், மகாபலிபுரம், கேளம்பாக்கம், தரமணி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் 1 செண்டி மீட்டர் மழை பெய்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.