தமிழ்நாடு

தறிகெட்டு ஓடிய கண்டெய்னர் லாரி... கட்டுக்கட்டாக பணமா..?

தறிகெட்டு ஓடிய கண்டெய்னர் லாரி... கட்டுக்கட்டாக பணமா..?

Rasus

கோவை உக்கடம் அருகே தறிகெட்டு ஓடிய லாரியில் பணம் இருப்பதாக தகவல் பரவியதால் நள்ளிரவில் லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

உக்கடம் ஆற்றுப்பாலம் அருகே இரவு 10.30 மணி அளவில் கண்டெய்னர் லாரி ஒன்று தறிகெட்டு வேகமாக சென்றுள்ளது. அதை மடக்கி பிடித்த மக்கள், ஓட்டுநரிடம் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மக்கள், லாரியில் கட்டுகட்டாய் பணம் இருக்கக்கூடும் என லாரியை முற்றுகையிட்டனர். லாரியை திறக்கக்கோரி காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கலைந்து செல்ல மறுத்தவர்கள் மீது லேசான தடியடி நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்ட லாரி, பல்வேறு கட்சியினர், தேர்தல் பறக்கும் படையினர் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது அதில் டீத்தூள் இருப்பது தெரியவந்தது. எனினும், அனைத்து மூட்டைகளையும் சோதனை செய்ய வேண்டும் என அங்கிருந்தவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து லாரிக்கு சீல் வைத்த தேர்தல் பறக்கும்படையினர், காலையில் முழு சோதனை நடத்தப்படும் என அறிவித்தனர். கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது, கண்டெய்னர் மூலம் பணம் எடுத்தப்பட்டச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.