கர்நாடக இசைக்கலைஞர் மோகன் வைத்யா பாஜகவில் இணைந்தார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்து வரும் சில மாதங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, கட்சித்தாவல், வார்த்தைப்போர், சீட்டுபிரச்னை, தேர்தல் அறிக்கை, பிரசாரம், தேர்தல், தேர்தல் முடிவு, பதவியேற்பு என பரபரவென இருக்கப் போகிறது.
இப்படியான அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் தேர்தலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்த முறை எப்படியாவது எம்.எல்.ஏக்களை பாஜக சார்பில் சட்டமன்றத்திற்கு அனுப்பிவிட வேண்டுமென தமிழக பாஜக மும்மரமாக இருக்கிறது. தலைவர் எல்.முருகனும் நிச்சயம் பாஜக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தை அலங்கரிப்பார்கள் என கூறிக்கொண்டு இருக்கிறார்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு பாஜகவில் சேர்ந்துள்ளார். அதற்கு முன்னதாக நடிகை நமீதா, ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர். குஷ்பு, நமீதா, கவுதமி, காயத்ரி ரகுராம், ராதாரவி,நெப்போலியன், கங்கை அமரன், கஸ்தூரி ராஜா, குட்டி பத்மினி, எஸ்வி சேகர், மதுவந்தி, பொன்னம்பலம், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளர் தினா, தயாரிப்பாளர் நடராஜன், நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் என இந்த பட்டியல் நீள்கிறது.
இந்நிலையில், கர்நாடக இசைக்கலைஞர் மோகன் வைத்யா, சென்னையில் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார். அப்போது பேசிய எல். முருகன், 2021 தேர்தலில்தான் போட்டியிட போவதில்லை எனவும் பாஜகவினரை சட்டமன்றத்துக்கு அனுப்பும் வேலையைத்தான் நான் செய்கிறேன் எனவும் தெரிவித்தார்.