தமிழ்நாடு

இந்துமதம் குறித்த கருத்து : நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார் மோகன் சி லாசரஸ்

Sinekadhara

இந்து கடவுள்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக மத போதகர் மோகன் சி லாசரஸ் பதில் மனு கொடுத்திருக்கிறார்.

இந்துகடவுள்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கிறிஸ்துவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து மோகன் சி லாசரஸ் தரப்பிலிருந்து இந்து கடவுள்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என உத்தரவாதம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிற மதங்களை இழிவுபடுத்தக் கூடாது என இயேசுநாதர் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி, மதபோதகர்கள் மிகுந்த பொறுப்புடன் பேசவேண்டும்; மதபோதகர்கள் பொறுப்புடன் பேசாவிடில் மதச்சார்பின்மை கொள்கைக்கு ஆபத்தாகிவிடும். மதச்சார்பின்மை, ஒற்றுமை, கலாசாரம், பண்பாட்டை காக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு என அறிவுறுத்தினார்.