தமிழ்நாடு

தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் மிதமான மழை

தமிழகம் மற்றும் புதுவையில் இன்றும் நாளையும் மிதமான மழை

webteam

தென் தமிழகம், புதுவை மற்றும் டெல்டா பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தினாலும் தமிழகத்துக்கு தேவையான மழையைக் கொடுக்கவில்லை. இந்நிலையில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தாலும் நீர் நிலைகள் நிரம்பும் அளவுக்கான மழை பெய்யவில்லை. இந்நிலையில் புதுச்சேரி வங்கக்கடலில் பெய்ட்டி புயல் உருவானது. 

இந்த மழை வட தமிழகத்தில் கடுமையான மழையைக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது பாதையில் மாற்றம் ஏற்பட்டு ஆந்திரா பக்கம் சென்றது பெய்ட்டி. இந்தப் புயலால் சென்னையில் கடுமையான குளிர்காற்று மட்டுமே வீசியது. தற்போது தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் வறண்டு வரும் நேரத்தில் மழை என்பது தேவையாக உள்ளது. 

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவுவதால் தென் தமிழகம், புதுவை மற்றும் டெல்டா பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிக்கு நாளை முற்பகல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் புவியரசன் தெரிவித்தார்