தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அப்போது பேசிய விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி, ”நான் 250 கி.மீ. தொலைவில் இருந்துதான் சட்டமன்றத்துக்கு வருகிறேன், ஆனால் எனக்குச் சொந்தமாக வண்டி வாகனம் கிடையாது, வாடகை வண்டியில்தான் வருகிறேன்” என்று கூறியிருந்தார்.
மேலும், 40 கி.மீ சுற்றளவு கொண்ட தொகுதியைச் சுற்றிச் சென்று மக்களைச் சந்தித்து மக்களுக்கு பணி செய்யவேண்டிய அளவிற்கான வாகன வசதி இல்லை என்றும் இப்படித்தான் முக்கால்வாசி சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள், அந்தச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவி செய்கின்ற வகையில் அவர்களுக்கு வாகன வசதி வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் மற்றும் உதவியாளர்கள் வழங்கப்படுவர் என்றும், காரின் பராமரிப்புக்கு தனியே 75 ஆயிரம் ரூபாய், அலுவலகப் பணிகளில் உதவி செய்ய ஓர் உதவியாளரை நியமிக்க ரூபாய் 25,000 வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பேசிய தவெக எம்.எல்.ஏ சபரி ஐங்கரன், ”தனக்கு கார் இல்லாததால் சட்டப்பேரவைக்கு ஆட்டோவில் வருகிறேன்” எனக் கூறியிருந்தார். மேலும் மற்றொரு தவெக எம்.எல்.ஏ சண்முகன், ’’கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றும் கூறினார்.
இந்த நிலையில், கார் இல்லாததால் ஆட்டோவில் வருகிறேன் என்று கூறிய தவெக எம்.எல்.ஏவின் தேர்தல் பிரமணத்தில் அவர் தனக்குச் சொந்தமாக கார் இருப்பதாக கூறியுள்ள தகவல் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவெக எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் தனது பிராமணப் பத்திரத்தில் தன்னிடம் டாடா டிகார் கார் இருக்கிறது என்றும், இரண்டு இருசக்கர வாகனங்கள் உள்ளது என்றும் கூறியுள்ளார். அதேபோல வங்கி இருப்பாக 30 லட்சம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல சட்டமன்றத்தில் கார் வேண்டும் என கோரிக்கை விடுத்த விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி டொயோட்டா எட்டியோஸ் கார் இருப்பதாக தனது பிராமணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார். மேலும், மனைவியிடம் 25 லட்சம் மதிப்புடைய நகைகள் இருப்பதாகவும், தனக்கு 50 லட்சம் மதிப்புல்ல அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இன்னோவா கார் வேண்டும் எனக் கூறிய தவெக எம்.எல்.ஏ சண்முகனிடமும், இரண்டு பென்ஸ் உள்ளிட்ட 4 கார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஏற்கெனவே கார் உள்ள எம்.எல்.ஏக்கள் தங்களிடம் கார் இல்லை என சட்டமன்றத்தில் கூறியுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.