தமிழ்நாடு

`அண்ணா சாலை விபத்தில் பலியான பெண் குடும்பத்துக்கு ரூ.1 கோடி கொடுங்க’- எம்எல்ஏ கோரிக்கை

webteam

சென்னையில் கட்டிடத்தை இடிக்கும் போது நடந்த விபத்தில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த பத்மப்ரியா குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்.

சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடத்தை இடிக்கும் போது, சாலையில் நடந்து சென்ற உசிலம்பட்டியைச் சேர்ந்த மென்பொருள் நிறுவன பணியாளர் பத்மப்ரியா பரிதாபமாக உயிரிழந்தார். எந்த பாதுகாப்பும் இன்றி கட்டிடத்தை இடிக்கும் போது நடந்த விபத்தில் உயிரிழந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த பத்ம ப்ரியாவுக்கு உரிய இழப்பீட்டை இதுவரை தமிழ்நாடு அரசு அறிவிக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்ட நபர்களையும் கைது செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன்.

மேலும் அவர் `தமிழ்நாடு அரசு விரைவில் உரிய இழப்பீடாக பத்மப்ரியாவை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்’ எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், “இந்த விபத்து குறித்து அரசு உரிய விசாரணை நடத்தி, மீண்டும் இது போன்ற விலையில்லா மனித உயிர்கள் பலியாவதை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்வகிறேன்” எனக்கூறியுள்ளார். தொடர்ந்து, “அண்ணன் ஒபிஎஸ் சார்பிலும், சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்ற முறையில் எனது சார்பிலும் பத்மப்ரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பேட்டியளித்தார்.