தமிழ்நாடு

நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு பேசுகிறார் ராஜேந்திர பாலாஜி - ஸ்டாலின் காட்டம்

webteam

சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, சட்டவிரோதி ஆகி வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால், இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.

இதனை குறிப்பிட்டு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ''பாஜகவுக்கு அதிமுக பாதம் தாங்குவது குறித்து நமக்கு
ஆட்சேபணை இல்லை. அதற்காக நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற ராஜேந்திரபாலாஜி என்ற ஒரு அமைச்சர் திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்தவர் கண்ணுக்கு முன்னால் மதச்சார்ப்பின்மைக்கு எதிராக பேசுகிறார். மக்களை மதரீதியாக
துண்டாட துணிகிறார். ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்
கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.