முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு மக்களிடையே முதன்முறையாக உரையாற்றிய விஜய், வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதாக உறுதியளித்ததுடன், தனது கட்சி தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவதாகவும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், ”கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் அதிகரித்திருக்கிறது. கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். எனவே, தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிடுவேன்” என்று கூறியிருந்தார். இதற்கு முன்னாள் முதல்வரான மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக பதவியேற்ற விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவர் கூறிய கருத்துக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில், ”மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க.
அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்னைகளையும் ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்துவிட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்டிலேயே தெளிவா நாங்க சொல்லிட்டோம்.
அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! ’நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்’ எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.