ஏடிஎம்-களில் மாதந்தோறும் வாடிக்கையாளர்கள் ஐந்து முறை கட்டணமின்றி பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். அதன்பிறகு ஏடிஎம்-மை பயன்படுத்தினால், ஒவ்வொரு முறையும் 21 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை 23 ரூபாயாக மாற்றி வசூலிக்க, வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. அனுமதி அளித்தது.
அதன்படி மே ஒன்றாம் தேதியில் இருந்து இந்த உத்தரவு அமல்படுத்தப்படும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஒவ்வொருவரையும் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய அரசு, அதன்பிறகு டிஜிட்டல் இந்தியா என்ற பெயரில் பணமதிப்பிழப்பு, மினிமம் பேலன்ஸ்-க்கு அபராதம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஏழை மக்களுக்கு சிரமத்தை கொடுத்ததாக சாடியுள்ளார்.
இந்த வரிசையில் ஏடிஎம்-களில் மாதாந்திர வரம்பை தாண்டி பணம் எடுப்பதற்கு 23 ரூபாய் வரை கட்டணம் விதிப்பது ஏழை, எளிய மக்களை பாதிக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், இத்தகைய சூழலில் ஏடிஎம் பயன்பாட்டிற்கான கட்டண உயர்வு என்பது 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் எனவும், இதற்கு பெயர் டிஜிட்டல்மயமாக்கல் அல்ல, நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல் எனவும் சாடியுள்ளார்.
ஏழைகள் ஏடிஎம் அட்டைகளை தேய்க்க, பணக்காரர்கள் திளைப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.