மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம் செய்ததற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலத் தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் எஸ்.பழனிசாமியை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த சுப்ரமணியின் மாநிலத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில், “உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளர் பழனிச்சாமி அவர்களை, திடீரென்று மாற்றியிருப்பது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேர்தல் பணிகளைச் செய்து கொண்டிருந்தவரை மாற்றியது ஏன்?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் "விசுவாசமாகப்" பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், மாநிலத் தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா?. இது, உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடவா? அல்லது உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வினர் ஒட்டுமொத்தமாகத் தில்லுமுல்லுகளில் ஈடுபடுத்தவா?” எனப் பதிவிட்டுள்ளார்.