தமிழக முதலமைச்சரும், ஆட்சியாளர்களும் துணிவிருந்தால் தங்கள் மீது வழக்கு போடட்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆட்சியாளர்கள் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள கடும் அதிருப்தியையும், கோபத்தையும் மறைக்க, திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். திமுக மீது ஈழப் பிரச்னைக்காக குற்றம் சுமத்தி, அதிமுக கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தியதை ஒரு பொருட்டாகக் கூட நினைக்கவில்லை என்று கூறியுள்ளார். எங்கள் முதுகை பார்ப்பதை விடுத்து, உங்கள் முகத்தைப் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியின் ஒவ்வொரு ஊழல் தொடர்பாகவும் திமுக நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருப்பதாகக் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக மீது உங்களால் குற்றம் சுமத்த முடியுமென்றால் நீதின்றத்தில் சென்று நிரூபித்துக் காட்டுங்கள் என சவால் விடுத்துள்ளார். திமுக என்பது விமர்சனங்களையும், பழிச்சொற்களையும், நெருக்கடிகளையும் துணிவுடன் எதிர்கொண்டு, நெருப்பாற்றில் நீந்தி புடம் போட்ட தங்கமாக எழுந்து நிற்கும் இயக்கம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.