தமிழ்நாடு

“தமிழகத்தின் உள் பகுதிகளில் மூடுபனி நிலவும்”- வானிலை ஆய்வு மையம்

Rasus

தமிழகத்தின் உள் பகுதிகளில் மூடுபனி நிலவும் என்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் உறைபனி நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் தொடங்கியது. இந்தாண்டு வழக்கத்தை விட அதிகமான மழைபொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கஜா புயல் பாதிப்புத் தான் அதிகம் இருந்தது. கிட்டத்தட்ட 12 மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப் போட்டது. ஆனால் மழை குறைவாகவே இருந்தது. தமிழகத்தில் இன்றுடன் வடகிழக்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், வழக்கத்தை விட 24 சதவீதம் குறைவாகவே மழை பெய்துதுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை வழக்கத்தை விட 50 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்துள்ளது.

இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, தெற்கு ஆந்திரா, ராயல் சீமா, உள் கர்நாடகா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிந்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் பகுதிகளில் மூடுபனி நிலவும் என்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் உறைபனி நிலவும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே அதிகப்படியான குளிர் காணப்படுகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான குளிர் காற்று வீசுவதால் ஊட்டி, மற்றும் கேரளாவில் இருக்கும் சூழ்நிலையே சென்னையிலும் நிலவுகிறது. இதனால் ஓரளவு சந்தோஷம் இருந்தாலும், சளிக் காய்ச்சல் வந்தவிடுமோ என்ற அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.