police
police pt desk
தமிழ்நாடு

தஞ்சை: கீழே கிடந்த 5 பவுன் தங்க நகைகளை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

webteam

தஞ்சை சிராஜ்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர் (45). இவர், தான் அடகு வைத்திருந்த 5 பவுன் நகைகளை மீட்டு பாக்கெட்டில் வைத்திருந்தார். பின்னர் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துவிட்டு பாக்கெட்டை பார்த்தபோது நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்துள்ளார்.

பாராட்டிய போலீஸ்

அப்போது தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்த மெக்கானிக் காதர் (45) என்பவர் கீழே கிடந்த நகையை எடுத்து, இது யாருடைய நகை என விசாரித்துள்ளார். அந்த நேரத்தில் அங்கு வந்த பிரபாகர் இது என்னுடைய நகை எனக் கூறியதை அடுத்து, நான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விடுகிறேன். நீங்கள் உரிய ஆவணங்களை காண்பித்து நகைகளை பெற்றுச் செல்லுங்கள் என காதர் கூறியுள்ளார்.

இதையடுத்து காதர், தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் 5 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்தார். பிரபாகர் உரிய ஆவணங்களை காண்பித்ததை அடுத்து காதர் முன்னிலையில் பிரபாகரிடம் போலீசார் நகைகளை ஒப்படைத்து கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என அறிவுறுத்தினர். கீழே கிடந்த நகையை பத்திரமாக எடுத்து அதனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மெக்கானிக் காதரை, போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர்.