தமிழ்நாடு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன குழந்தை: 1 மணி நேரத்தில் மீட்ட ரயில்வே போலீசார்

kaleelrahman

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெற்றோர் காணாமல் தவித்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை மீட்டு 1 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்த ரயில்வே காவல்துறையினர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் வினோத்குமார் - லதா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ருத்விக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வினோத் தனது குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று தனது மகனுக்கு மொட்டை அடித்து நேர்த்திகடன் செலுத்திவிட்டு சென்னை திரும்பினர்.

இதையடுத்து மீண்டும் விசாகப்பட்டினம் செல்வதற்காக, இன்று அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். அப்போது திடீரென ஒன்றரை வயது மகன் ருத்விக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து உடனே ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் குழந்தை காணாமல் போனது குறித்து தெரிவித்துள்ளனர்.

உடனே போலீசார் ரயில் நிலையத்தில் தவறவிட்ட குழந்தையை மீட்க அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வழிதவறி சென்ற குழந்தையை 1மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.