உயிரிழந்த சிறுவன் pt web
தமிழ்நாடு

கோவில்பட்டி | காணாமல்போன 5 வயது சிறுவன்; பக்கத்துவீட்டு மாடியில் சடலமாக மீட்பு

கோவில்பட்டியில் நேற்று காணாமல் போன ஐந்தாம் வகுப்பு சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் மணிசங்கர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் முருகன். இவரது மனைவி பாலசுந்தரி. இவர் தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் அங்குள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் கருப்பசாமி 5ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட, சகோதரன் பள்ளிக்கு சென்று விட கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இத்தகைய சூழலில் வீட்டில் இருந்த சிறுவன் மாயமாகியுள்ளார்‌.

சிறுவன் கருப்பசாமி கழுத்தில் ஒன்றை பவுன் தங்க செயின் மற்றும் கையில் 1 கிராம் தங்க மோதிரம் அணிந்து இருந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதனை அடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுவனை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக அங்குள்ள வீடுகளில் சோதனை நடத்தி அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். ஆனாலும், எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதையடுத்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் சிறுவனைத் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று காலையில் சிறுவன் வீடு அருகே இருந்த பக்கத்து வீட்டு மாடியில் மூச்சுப் பேச்சில்லாமல் மயக்கம் அடைந்த நிலையில் சிறுவன் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் உயிரிழந்து விட்டதாகவும், இறந்து பல மணி நேரம் இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

நேற்று காலையில் காணாமல் போன சிறுவன் பக்கத்து வீட்டு மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் காணாமல் போனது எப்படி? குற்றவாளிகள் யார் என்பதை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.