Minister Sivasankaran
Minister Sivasankaran pt desk
தமிழ்நாடு

“பள்ளி வாகனங்களில் மட்டுமே மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்” - அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

webteam

நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் 106 பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, மாணவர்கள் இருக்கை, சிசிடிவி கேமரா, அவசரகால வழி, வாகனத்தின் தரம், தீயணைப்பான் உள்ளிட்டவைகளை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து பள்ளி பேருந்தை இயக்கச் சொல்லி அதில் பயணம் செய்து ஆய்வு செய்த அவர், அவசரகால மீட்பு குறித்து தீயணைப்பு துறையினர் செயல்பாடுகளையும் பார்வையிட்டார். இதில், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

fire service demo

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் 32,167 வாகனங்களில் 12,179 வாகனங்கள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்களை வரும் 29ஆம் தேதிக்குள் ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை நிர்ணயம் செய்ய தமிழக அரசிடம் வழிமுறை இல்லை. தனியார் பேருந்துகள் சங்கத்தின் சார்பில் பொதுமக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனை மீறியதாக ஒரு சில பேருந்துகள் மீது புகார் வந்துள்ளன. கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் ஆம்னி பேருந்துகள் மீது போக்குவரத்து ஆணையர் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

fire service demo

கடந்த தீபாவளி, பொங்கல் காலத்தில் கூடுதலாக பயணிகளிடம் வசூல் செய்யப்பட்ட தொகைகள் திரும்ப வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக மீண்டும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும். பள்ளி வாகனம் அல்லாமல் தனியார் வாகனத்தை பயன்படுத்தி மாணவர்களை அழைத்துச் சென்றால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் விரைவில் மினி பேருந்துகள் இயக்கப்படும்” என தெரிவித்தார்.