தமிழ்நாடு

கந்த சஷ்டி கவசம் அவதூறு: கறுப்பர் கூட்டத்திற்கு அமைச்சர் கண்டனம்

webteam

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்

‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூ-டியூப் சேனலில் இந்து மதத்தை சேர்ந்த கடவுள்களையும், இந்த மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்துக்கள் பகிரப்படுவதாக பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ‘கறுப்பர் கூட்டம்’ யூ-டியூப் சேனல் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை வேளச்சேரியில் கைது செய்தனர். இந்நிலையில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இந்நிலையில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பிய கறுப்பர் கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், கந்த சஷ்டி கவசம் தமிழ் மக்களின் இல்லங்களில் அன்றாடம் ஒலிக்கும் பக்திப்பாடல். அதனை கொச்சப்படுத்தி தவறாக அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது மிகவும் கண்டித்தக்கது என தெரிவித்துள்ளார்