அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி கோப்புப் படம்
தமிழ்நாடு

அண்ணாமலை மீது கடுமையாக குற்றம்சாட்டி, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி நீதிமன்றத்தில் புதிய மனு!

webteam

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் மேகலா தரப்பில் கூடுதல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

senthil balaji, ed, high court

அந்த மனுவில், அரசியலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என்ற அடிப்படையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, தனது கணவருக்கு எதிராக வெறுப்பை வளர்த்துக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் என் கணவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என 2022 ஆகஸ்ட் முதல் அண்ணாமலை பேசி வருகிறார்.

கைது செய்து மருத்துவமனையிலேயே ரிமான்ட் செய்த போது, அதை ஆட்சேபித்த எங்களது மனுவை நீதிமன்றத்தில் விசாரிப்பதாகக் கூறிய முதன்மை நீதிமன்ற நீதிபதி, நீதிமன்றம் வந்தபின்னர், அந்த மனுவை விசாரிக்கத் தேவையில்லை என கூறிவிட்டார்.

செந்தில் பாலாஜி - அண்ணாமலை

அமலாக்கத்துறை சார்பில் ஜூன் 13ஆம் தேதி இரவு 11 மணிக்கு சோதனை நிறைவடைந்ததாக குறிப்பிட்டுள்ள நிலையில், நள்ளிரவு 1.39 மணிக்குதான் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். இடைப்பட்ட மூன்று மணி நேரத்தில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.

எனவே சட்டவிரோத கைது உத்தரவில் இருந்து எனது கணவர் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும். அந்த மனுவை முறையாக பரிசீலிக்காமல் அவரை நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது. அவரை விடுவிக்க வேண்டும்” என மேகலா சுட்டிக்காட்டியுள்ளார்.

Chennai High Court

ஜூன் 27 ஆம் தேதி (நாளை) மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரும்போது இந்த மனுவும் விசாரிக்கப்பட உள்ளது.