அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி கோப்புப் படம்
தமிழ்நாடு

மருத்துவமனை சிகிச்சைகள் முடிந்து, மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி

webteam

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு இதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

minister senthil balaji

இந்நிலையில், உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜி உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் முதல் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் கடந்த 15-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி, காவல்துறை ஆம்புலன்ஸ் மூலமாக பலத்த பாதுகாப்புடன் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

செந்தில் பாலாஜி

பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.