Minister Raghupathi
Minister Raghupathi pt desk
தமிழ்நாடு

“அள்ளி அள்ளி கொடுத்தார்களாம்... மோடி மஸ்தான் வேலை தமிழ்நாட்டில் எடுபடாது” - அமைச்சர் ரகுபதி

webteam

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி தெற்கு வடக்கு ஒன்றியம் மற்றும் நகர திமுக சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில்...

Public meeting

“இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற பன்னாட்டு விமான முனையம் திறப்பு விழா நிகழ்ச்சி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அது மத்திய அரசின் நிகழ்ச்சி, இதனை உணர்ந்தவர் அறிந்தவர் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின். இது மத்திய அரசு நிகழ்ச்சி என்பதால் சற்று அடக்கித்தான் வாசிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் நிகழ்ச்சியை கையில் எடுத்து செய்கின்றார்கள். அந்த நிகழ்ச்சியில் ஒரு சிலர் முழக்கங்கள் எழுப்பியதாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதுதான்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதுதான். இதைவிட சிறிய கட்சி தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அவர்கள் ஏதாவது கத்தி விட்டு போக வேண்டும் என்பதற்காக அதை அப்படியே விட்டு விட்டோம், தவிர அடக்கி வாசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதுவும். ஏனென்றால் அழைப்பிதழ்கள், அனுமதி சீட்டு அவர்களுடையது. அங்கே நடைபெற்ற விழாவில் திமுகவைச் சேர்ந்தவர்கள் தடுத்து வெளியே நிறுத்தப்பட்டார்கள். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை அதுதான் என்று கூறி மொத்த உறுப்பினர்களையும் ஓரிடத்தில் சேர்த்து வைத்தது வெட்கக்கேடான விஷயம்.

PM Modi

திமுக என்ற மாபெரும் சக்தியை எதிர்த்து நிற்பதற்கு தமிழ்நாட்டில் எந்த சக்தியும், திராணியும் யாருக்கும் இல்லை. டெபாசிட் வாங்க முடியாத கட்சிகளுக்கெல்லாம் நாங்கள் கவலைப்படுவது கிடையாது. அவர்கள் கத்தி கூச்சல் போடுவது பற்றியும் எங்களுக்கு கவலை கிடையாது. தமிழ்நாட்டிற்கு அள்ளி அள்ளி தருவதாக பிரதமர் மோடி கூறுகிறார். தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நான்கு வழி சாலை போட்டது திமுகவில் அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி. இந்த சாலை வசதி ஏற்படுத்தபடாவிட்டால் போக்குவரத்து வசதி முன்னேறி இருக்காது.

விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வுதான். கச்சா எண்ணையின் விலை குறைந்தாலும் டீசல், பெட்ரோல் விலை குறையவில்லை. பெட்ரோல், டீசல் விலையில் பகல் கொள்ளை அடிக்கின்றனர். மக்களை ஏமாற்றும் மோடி மஸ்தான் வேலையை தற்போது மத்திய அரசு செய்து வருகிறது. இது தமிழ்நாட்டில் எடுபடாது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 சீட்டுகளை திமுக கூட்டணி பெறும். இதனை யாராலும் தடுக்க முடியாது.

Public meeting

எங்களை எடப்பாடியும் ஒன்றும் செய்ய முடியாது, அண்ணாமலையும் ஒன்றும் செய்ய முடியாது. உத்தரப்பிரதேசத்தில் வேண்டுமானால் பாஜக மக்களை ஏமாற்றலாம். அங்கேயும் மக்களிடம் நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். இந்தியா என்பது I.N.D.I.A கூட்டணி மட்டும்தான் என்பதை உருவாக்குவோம்” என்றார்.