உதயநிதி ஸ்டாலின் - ராஜ்மோகன் web
தமிழ்நாடு

’அரசு கேபிளில் இருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கம்..’ உதயநிதி கண்டனம்! அமைச்சர் பதில்!

அரசு கேபிளில் இருந்து 3 செய்தி சேனல்கள் நீக்கப்பட்டுள்ளதாக உதயநிதி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதுகுறித்த விளக்கத்தை அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்துள்ளார்.

Rishan Vengai

அரசு கேபிளில் மூன்று சேனல்கள் நீக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அமைச்சர் ராஜ்மோகன் மறுத்துள்ளார். தொழில்நுட்ப கோளாறால் சில செட் டாப் பாக்ஸ்களில் மட்டும் தற்காலிகமாக ஒளிபரப்பு பாதிக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட சேனல்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். ஒப்பந்த நிறுவனம் மூலம் கோளாறு சரிசெய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன என்றார்.

அரசு கேபிளில் இருந்து மூன்று செய்தி சேனல்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சியுங்கள்' என்று முதல்வர் ரீல்ஸுக்காகப் பேசிவிட்டு, குறைகளைச் சுட்டிக்காட்டும் ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பது பாசிசத்தின் மற்றொரு வடிவம் என்று சாடியுள்ளார். ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

இந்தசூழலில் எழுந்த விமர்சனத்திற்கு பதிலளித்திருக்கும் அமைச்சர் ராஜ்மோகன், “3 சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்பந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்னைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என விளக்கம் கொடுத்துள்ளார்.