சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என தான் பிரார்த்தனை செய்வதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், “எம்பி கே.சி பழனிசாமி கைது செய்யப்பட்டது குறித்து எனக்குத் தெரியாது. ரஜினி பெரியார் குறித்து தவறாக ஏதும் பேசவில்லை. என்னைப் பொறுத்தவரை பெரியார் குறித்து ரஜினி பேசி இருப்பதால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. நடந்த நிகழ்வை மட்டுமே ரஜினி கூறினார். பிடித்தவர்கள் அவரது கருத்தை ஏற்றுக் கொள்ளட்டும், பிடிக்காதவர்கள் அமைதியாக இருந்து கொள்ளட்டும். ரஜினியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது தேவையற்றது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. அவர் வெளியே வந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அவர் சிறையில் இருப்பது வேதனை அளிக்கிறது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் எனக்கு மகிழ்ச்சி” எனக் கூறினார்.