விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தில் அமைச்சர் பொன்முடி மீது சிலர் சேற்றை வாரி இறைத்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. வேண்டும் என்றே அரசியலாக்குவதற்காக சிலர் இவ்வாறு செய்ததாக அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.
தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற அமைச்சர் பொன்முடி காரில் அமர்ந்தவாறே பேச்சுவார்த்தை நடத்தியதால் மக்கள் அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, சிலர் அமைச்சரை காரை விட்டு இறங்கக்கோரி சேற்றை வாரி அடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, காரிலிருந்து இறங்கி குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்து புறப்பட்டார். தொடர்ந்து, விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “வேண்டும் என்றே அரசியலாக்குவதற்காக சிலர் என் மீது சேற்றை வாரி அடித்துள்ளனர். சேறு வீச்சு சம்பவத்தை பெரிதுபடுத்தி அரசியல் செய்ய விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.